தற்போதைய செய்திகள்:

Jul 25, 2011

நான் தவறு எதையும் செய்யவில்லை: ஆ.ராசா வாதம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கொள்கையையே பின்பற்றியதாகவும், தாம் எவ்வித தவறையும் செய்யவில்லை எனவும் நீதிமன்றத்தில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா வாதிட்டார்.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்வது தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்று வருகிறது. இதில், குற்றம்சாட்டப்பட்டவரான ஆ.ராசா தனக்காக தானே வாதிடுவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஓ.பி. சைனி முன்பு ஆ.ராசா இன்று வாதிடுகையில், "நான் தவறு எதுவும் செய்யவில்லை. ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டாம் என்ற முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணி (பிஜேபி தலைமையிலானது) அரசில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு. அதையே நானும் தொடர்ந்து பின்பற்றினேன்.

நான் பின்பற்றிய தொலைத் தொடர்புக் கொள்கை தவறு என்றால், 1993-ல் இருந்து எனக்கு முன்பு பணியாற்றிய அனைத்து தொலைத்தொடர்பு அமைச்சர்களையும் தவறு இழைத்தவர்களே. அப்படியென்றால், அவர்களும் என்னுடன் சிறையில் இருக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு அமைச்சர்களாக இருந்த அருண் ஷோரி 26 உரிமங்களையும், தயாநிதி மாறன் 22 உரிமங்களையும் வினியோகித்துள்ளார்கள். நான் 122 உரிமங்களையும் வினியோகித்துள்ளேன். எண்ணிக்கை ஒரு பொருட்டு அல்ல. அதேநேரத்தில், எவருமே ஏலத்தில் உரிமங்களை வழங்கவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.

அவர்கள் (அருண் ஷோரி, தயாநிதி மாறன்) தவறு செய்யாத பட்சத்தில், என்னை ஏன் விசாரிக்க வேண்டும். நான் செய்ததை செய்யவில்லை என்று அவர்கள் மறுக்கட்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விட வேண்டாம் என 2003 அமைச்சரவையில் தான் முடிவு செய்யப்பட்டது. அதைத் தான் நான் பின்பற்றினேன். உண்மையில், எல்லாவற்றையும் சட்டப்படி பின்பற்றிய எனக்கு பரிசு தான் கொடுக்க வேண்டும்.

நாட்டின் தெருக்களில் உள்ள ஒவ்வொருவரும் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள். இங்கே சமூக நீதியை கருத்தில் கொள்ள வேண்டும், நான் மக்களின் சேவகன். மொபைல் போன் சேவைக் கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளேன். ரிக்ஷா காரர்கள் கூட மொபைல் போனில் பேசுகிறார்கள். வீட்டு வேலை செய்பவர்கள் கூட மொபைல் போன் உபயோக்கிறார்கள்," என்று ஆ.ராசா தனது வாதத்தைத் தொடர்ந்தார்.
மன்மோகன், ப.சிதம்பரம்...

மேலும், ஆ.ராசா தனது வாதத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டார்.

"பிரதமர் முன்னிலையில் ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு நிதியமைச்சர் (அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம்) ஒப்புதல் அளித்தார். இதை பிரதமரை மறுக்குச் சொல்லுங்கள் பார்ப்போம்," என்று வாதிட்டார் ராசா.

Source : Vikatan

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!