தற்போதைய செய்திகள்:

May 23, 2011

திறந்தது மைசூர் கதவு; திறக்குமா முதல்வரின் மனது...?

ஒல்லியான தேகம்; முரட்டு மீசையுடன் அடர்ந்த காட்டுக்குள் அரசாட்சி செய்து மூன்று மாநில காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக  திகழ்ந்து, பல போலீசாரைக் கொன்று ஒரு தனி சாம்ராஜ்யமாக திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த வீரப்பனை ஜெயலலிதாவின் முந்தைய  ஆட்சிக் காலத்தில் சம்காரம் செய்தது காவல்துறை. ஆனாலும் வீரப்பனின் வழக்கு மட்டும் இன்னும் ஆயுளோடு உள்ளது.
 வீரப்பனின்  மனைவி முத்துலட்சுமி மீது  கர்நாடக போலீசார் மொத்தம் 5 வழக்குகள் தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்குகள எதிலும் முத்துலட்சுமி நேரடியாக தொடர்புடைய குற்றவாளியாக  குற்றம் சாட்டப்படவில்லை. மாறாக வீரப்பன் செய்த சில சட்டவிரோத கொலைகளுக்கு முத்துலட்சுமி உடந்தையாக இருந்தார் என்பதுதான் வழக்கு. இந்த வழக்குகளில் ஏற்கனவே 4 வழக்குகளில் அவர் விடுதலையாகி விட்டார். 5 வதாக நிலுவையில் இருந்த சாம்ராஜ் நகர் போலீஸ் கொலை வழக்கிலும் அவர் கடந்த 20  ம் தேதி விடுதலை செய்யப்பட்டு விட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த முத்துலட்சுமி மைசூர் மத்திய சிறையில் இருந்தார். இந்த நிலையில், அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் கடந்த புதன் கிழமை சாம்ராஜ்நகர் கோர்ட்டு அவரை விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து முத்துலட்சுமி மேட்டூர் சென்று தனது உறவினர்களை சந்தித்து விட்டு, சென்னையில் உள்ள தனது மகள்களுடன் வசிக்க முடிவு செய்து இருந்தார்.

இதற்கிடையே, வழக்கில் இருந்து முத்துலட்சுமி விடுதலை செய்யப்பட்டாலும், மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட வழக்கு கோபி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முத்துலட்சுமியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கு விசாரணை முடியாததால், முத்துலட்சுமியை தமிழக போலீசார் வசம் ஒப்படைத்தனர் கர்நாடக காவல்துறையினர். பின்னர் கோபி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் மற்றொரு நாள் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

முத்துலட்சுமி மீது தற்போது நிலுவையில் உள்ள ஒரே வழக்கான நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கை பொறுத்தவரையில், கடத்தப்பட்ட ராஜ்குமாரும், கடத்திய வீரப்பனும் இன்று உயிரோடு இல்லை. ஆனால் அந்த வழக்கு மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறது. அது முத்துலட்சுமியின் வாழ்க்கையை மட்டுமன்றி, ஏற்கனவே தந்தையை  இழந்த நிலையில் தாயின் அரவணைப்பை எதிர்பார்க்கும் அவரது மகள்களின் வாழ்க்கையையும் ஒரு சேர கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மேலும் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நளினிக்கு கருணை காட்டவேண்டும் என்று சொல்லும் மனித நேயர்கள், முத்துலட்சுமி விசயத்தில் மூச்சு விடாதது ஏன் என்பது புரியவில்லை. எனவே அரசு விரைவாக முத்துலட்சுமி மீதான நிலுவை வழக்கை விரைந்து முடிந்து, அவரையும் அவரது பிள்ளைகளையும் சுதந்திர சந்தோஷ வாழ்க்கை வாழ வழிகாட்டவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அதோடு, முத்துலட்சுமியின் வழக்கு விஷயங்கள், தவறான பாதையில் பயணிக்கும் கணவர்கள் தங்களது மறைவிற்கு பின்னும் தமது குடும்பத்திற்கு தீராத வேதனையை  விட்டு செல்கிறார்கள் என்பதற்கு நிதர்சன சான்றாகவும் படிப்பினையாகவும் உள்ளது.
-முகவை அப்பாஸ். 

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!